அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

nayanar

திருநக்ஷத்ரம் :  மார்கழி அவிட்டம்

அவதார ஸ்தலம் :  ஸ்ரீரங்கம்

ஆசார்யன் :  வடக்குத் திருவீதிப் பிள்ளை

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

க்ரந்தங்கள் : திருப்பாவை ஆராயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம்,  அமலனாதிபிரான் வ்யாக்யானம், அருளிச்செயல் ரஹஸ்யம் (ஆழ்வாரின் அமுதச்சொற்களைக் கொண்டே எழுதப்பட்ட ரஹஸ்யத்ரய விவரணம்),  ஆசார்ய ஹ்ருதயம் பட்டோலை (ஆசார்ய ஹ்ருதயத்திற்கு அவரே எழுதிய வ்யாக்யானம் இப்பொழுது கிடைக்கவில்லை) மற்றும் பல.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளை என்ற ஆசார்யருக்குத் திருக்குமாரராக நம்பெருமாளின் திருவருளால் அவதரித்தார் (இதை நாம் முன்பே வடக்குத் திருவீதிப் பிள்ளை சரித்ரத்தில் பார்த்திருக்கிறோம்).

நாயனாரும் அவருடைய மூத்த சகோதரருமான பிள்ளை லோகசார்யரும் பெருமாளும், இளையபெருமாளும் அயோத்தியில் வளர்ந்தது போலவும்; கண்ணன் எம்பெருமானும் நம்பி மூத்தபிரானும் கோகுலத்தில் வளர்ந்தது போலவும் ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து வந்தனர். அவர்கள் நம்முடைய சம்ப்ரதாயத்தில் உயர்ந்த ஆசார்யர்களான நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்றவர்களின் கடாக்ஷமும், அனுக்ரஹமும், வழிகாட்டுதலும் கிடைக்கபெற்ற மிகுந்த பாக்யவான்களாக இருந்தனர். அவர்கள் நம் சம்ப்ரதாய அர்த்த விசேஷங்களை தம் தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளையின்  திருவடிவாரத்திலேயே கற்றனர். இவ்விரண்டு ஆசார்ய ஸிம்ஹங்களும் தம் வாழ்நாள் முழுவதும் ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்தையே கடைப்பிடித்து வாழ்ந்த தனித்துவம் உடையவராவர்.

மணவாளமாமுனிகள் தம்முடைய உபதேச ரத்தின மாலை 47வது பாசுரத்தில் நாயனாரையும் அவருடைய க்ரந்தங்களையும்  கீழ்வருமாறு சிறப்பித்திருக்கிறார்.

நஞ்சீயர் செய்த வ்யாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே
தம் சீரால் வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுனி
செய்யுமவை தாமும் சில

எளிய மொழிபெயர்ப்பு

பெரியவாச்சான் பிள்ளைக்கு முன்பே நஞ்சீயர் என்னும் ஆசார்யர் ஆழ்வார்களின் அருளிச்செயலான ப்ரபந்தங்கள் சிலவற்றுக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார். பெரியவாச்சான் பிள்ளைக்குப் பின்பு, ஆத்ம குணங்கள் நிரம்பியவரும் பிள்ளை லோகாசார்யரின் அன்பு சகோதரருமான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆழ்வார்களின் ப்ரபந்தங்கள் சிலவற்றுக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார்.

நாயனாரின் பெருமைகளை பிளைலோகம் ஜீயர் தம்முடைய வ்யாக்யானங்களில் ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார்.

  • நாயனாரின் சிறப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றை “தம் சீர்” என்பதை விளக்கும் இடத்தில் வெளிக்காட்டியுள்ளார். நாயனாரின் அருளிச்செயல் வ்யாக்யானங்கள் மற்ற ஆசார்யர்களின் வ்யாக்யானங்களைவிடவும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருப்பதைக் கண்டு உணர்ந்து தெரிவித்துள்ளார். இச்சிறப்பை நாம் “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும்  நாயனரின் க்ரந்தத்தை படிக்கும்பொழுது நன்கு அறிந்துகொள்ளலாம். இந்த க்ரந்தமானது பெரும்பாலும் ஆழ்வார்களின் அமுதச் சொற்களைக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. எனினும் சில சொற்கள் இதிஹாஸ, புராணங்களிலிருந்தும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
  • வையகுருவின் தம்பி” என்பதை விளக்கும்பொழுது நாயனாரின் சிறப்பானது, பிள்ளை லோகாசார்யரின் தம்பியாக இவர் அவதரித்ததாலே மேலும் ஏற்றம் பெற்றது என்று காட்டப்பட்டுள்ளது. இவர் “ஜகத்குருவரானுஜ” அதாவது பிள்ளை லோகாசார்யரின் தம்பியார் என்று மிகவும் புகழ் பெற்றிருந்தார்.

நாயனாரின் திருப்பாவை, கண்ணிநுண்  சிறுத்தாம்பு, அமலனாதிபிரான் வ்யாக்யானங்கள் மிகவும் ரஸிக்கக்கூடியவைகளாக இருந்தாலும் இவருடைய “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தமே இவருக்கு மிகவும் பெருமை சேர்த்த ஒன்றாகும்.

நாயனாரின் வ்யாக்யான க்ரந்தங்களும் / க்ரந்தங்களும்

  • நாயனாரின் திருப்பாவை 6000படி வ்யாக்யானமானது விரிவானதும், நுணுக்கமானதும், மிகவும் அழகான ஒன்றானதும் ஆகும். இந்த வ்யாக்யானத்தில் நம் சம்ப்ரதாய அர்த்த விசேஷங்களை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். நம் சம்ப்ரதாய தத்துவங்களான எம்பெருமானே அடையப்பட வேண்டியவனும் (உபேயத்வம்), அவனை அடைவதற்கு அவனே உபாயம் (உபாயத்வம்) எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபை (ஒரு காரணனுமின்றி காட்டும் தயை), பிராட்டியின் புருஷகாரம் (சேதனனுக்காக எம்பெருமானிடம் பரிந்து பேசுவது), பரகத ஸ்வீகாரம், கைங்கர்யத்தில் களை (எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும்பொழுது ஏற்படும் விரோதி) முதலியவைகளைப் பற்றி மிகவும் தெளிவாக விவரித்துள்ளார்.
  • நாயனாருடைய அமலனாதிபிரான் வ்யாக்யானம் நம் சம்ப்ரதாயத்தில் மிகவும் நேர்த்தியாகவும், அழகுறவும் எடுத்துரைக்கப்பட்ட ஒன்றாகும். இதில் நாயனார் ஆழ்வார் அனுபவித்த எம்பெருமானின் திருமேனியையும் நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தையும் அழகுற இணைத்து வ்யாக்யானம் செய்துள்ளார். இதை நாம் ஏற்கனவே திருப்பாணாழ்வாரின் அர்ச்சாவதார அனுபவமென்பதின் ஒரு பகுதியாக பார்த்துள்ளோம்.
  • நாயனாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானமானது பஞ்சமோபாயத்தின் (ஆசார்யனே நமக்கு எல்லாம் என்று ஏற்றுக்கொண்டு அவருக்கு கைங்கர்யம் செய்வது) சிறப்புகளை மிக அழகாக தெளிவுபடுத்துகிறது.
  • நாயனாரின் அருளிச்செயல் ரஹஸ்யம் என்ற க்ரந்தமானது ரஹஸ்ய த்ரயத்தை (திருமந்திரம், த்வயம், சரம ச்லோகம்), ஆழ்வார்களின் அருளிச்செயலான ப்ரபந்தங்களிலுள்ள சொற்களைக்கொண்டே அழகுற விவரிக்கின்றது.
  • நாயனாரின் படைப்புகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த “ஆசார்யஹ்ருதயம்” என்னும் க்ரந்தமானது நம்மாழ்வார் திருவாய்மொழி அருளியபோது அவருக்கிருந்த மனநிலையையும், திருவாய்மொழி மூலமாக ஆழ்வார் எடுத்துரைத்துள்ளதையும் ஆழ்வாரின் மனநிலையைக்கொண்டே தெளிவுபடுத்தியுள்ளார். “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தமானது பிள்ளை லோகாசார்யர் அருளிய “ஸ்ரீவசன பூஷணம்” என்னும் திவ்ய சாஸ்த்ரத்தின் தத்துவங்களை இன்னும் பரக்க விவரிக்கின்றது. நாம் முன்பே ஆசார்ய ஹ்ருதயம் மூலமாக நாயனார் அடைந்த அர்ச்சாவதார அனுபவங்களை  http://ponnadi.blogspot.in/2012/11/archavathara-anubhavam-nayanar-anubhavam.html என்பதில் பார்த்துள்ளோம்.

நாம் ஒருவரைப் பற்றிய சிறப்புகளை நன்கு தெரிந்துகொள்ள அவரைப்பற்றி மிகவுயர்ந்த ஆசார்யர்கள் என்ன கூறியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நாயனார் இளம் வயதிலேயே இப்பூவுலகில் தம் திருமேனியைத் துறந்து தமையனாரான பிள்ளை லோகாசார்யரை விட்டு, பரமபதம் செல்ல முடிவு செய்தார். பிள்ளை லோகாசார்யர் தன் தம்பியாரின் திருமுடியை மடியில் வைத்துக்கொண்டு (சோகக்கடலில் ஆழ்ந்து) பின்வருமாறு கூறினார்.

மாமுடும்பை மன்னு மணவாள அண்ணலொடு
சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால்
மாம் என்று தொட்டுரைத்த சொல்லும்
துயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார்.

எளிய விளக்கம்

நாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு  “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் ? என்று சோகிக்கிறார். பிள்ளை லோகாசார்யரே இப்படி சோகத்தில் ஆழும்படியானது நாயனாரின் மகிமையாகும்.

நாமும் நாயனாரின் திருவடித்தாமரைகளில் பணிந்து எம்பெருமானார் மீதும், நம் ஆசார்யன் மீதும் மிகுந்த பற்று ஏற்படவேண்டுமென்று ப்ரார்திப்போம்.

அழகிய மணவாளபெருமாள் தனியன்

த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

அழகியமணவாளப்பெருமாள் நாயனாரை மிகவும் பெருமைப் படுத்தும் தனியன் (ஆசார்ய ஹ்ருதயம் சேவித்த பிறகு சேவிக்கப்படுவதாகும்)

தந்தருளவேணும் தவத்தோர் தவப்பயனாய்
வந்த முடும்பை மணவாள – சிந்தையினால்
நீயுரைத்த மாறன் நினைவின் பொருளனைத்தின்
வாயுரைத்து வாழும் வகை

அடியேன் சாந்தி ராமாநுஜ தாஸி

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2012/12/15/azhagiya-manavala-perumal-nayanar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org