கோயில் கந்தாடை அப்பன்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே  நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம்

தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி

அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம்

ஆசாரியன்: மணவாளமாமுநிகள்

பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம்

கோயில் கந்தாடை அப்பன், கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம்  )

கோயில் கந்தாடை அப்பன், கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம்

யதிராஜ பாதுகை (எம்பெருமானாரின் திருவடிகள்)  என்று போற்றப்பட்ட முதலியாண்டானின் திருவம்சத்தில் தேவராஜ தோழப்பரின் திருக்குமாரராகவும் , கோயில் கந்தாடை அண்ணனின் திருத்தம்பியாராகவும் , கோயில் கந்தாடை அப்பன் அவதரித்தார். பெற்றோர்களால் ஸ்ரீநிவாசன்  என்று பெயரிடப்பட்ட இவரே பிற்காலத்தில் மணவாளமாமுநிகளின் ப்ரிய சிஷ்யரானார் .

மணவாளமாமுநிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவரங்கம் எழுந்தருளிய பொழுது, பெரியபெருமாள் (ஸ்ரீ ரங்கநாதன்) அவரை சத் சம்பிரதாயத்தின் தலை நகரமான திருவரங்கத்திலேயே இருந்து சத் சம்பிரதாயத்தை வளர்த்து வரும் படி பணித்தார். பின் மணவாளமாமுநிகள்  பூர்வாசார்ய கிரந்தங்களை திரட்டி , அவற்றை ஓலையிட்டு  கொண்டு கிரந்த காலக்ஷேபங்கள்  செய்து வந்திருந்தார் . அந்தமில் சீர் மணவாளமுநிப்பரரின் பெருமைகளையெல்லாம்  கேட்டறிந்த  பல பெரியவர்கள் மற்றும் ஆசார்ய புருஷர்கள் இவர் திருவடிகளையே தஞ்சமாய் பற்ற வந்த வண்ணம் இருந்தனர் .

எம்பெருமானின் திருவுள்ளத்தால், முதலியாண்டான் திருவம்சத்தில் தோன்றிய ஆசார்யவரரான கோயில் கந்தாடை அண்ணன் , மணவாள மாமுநிகளின்  சிஷ்யரானார். இவர், பின்னர் மணவாளமாமுநிகளால்  சத் சம்பிரதாய ப்ரவர்த்தனத்திற்காக  நியமிக்கப்பட்ட அட்ட திக்கஜங்ளிலே ஒருவர் ஆனார். இவர் மணவாளமாமுநிகளின் திருவடித்தாமரைகளைத் தஞ்சமாய் பற்ற வரும் வேளையிலே தம்மோடு தம்மை சேர்ந்தவர்களையும் அழைத்துக்கொண்டார் . இவ்வாறு கோயில் கந்தாடை அண்ணனோடு வந்தவர்களில் ஒருவர் தான் கோயில் கந்தாடை அப்பன் . “வரவரமுநிவர்ய கனக்ருபா பாத்ரம்” என்று இவரை கொண்டாடும் தனியனிலிருந்தும் , “மணவாளமாமுநிகள் மலரடியோன் வாழியே ” என்று பல்லாண்டு பாடும் இவர் வாழித்திருநாமத்தினிருந்தும், இவர் எப்பொழுதுமே சரம பர்வ  நிஷ்டையிலே (ஆசார்யனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு புரிதலிலே) ஆழ்ந்து எழுந்தருளியிருந்தார் என்று நாம் அறிந்து கொள்ளலாம் .

 மணவாளமாமுநிகளின் இருபக்கங்களில் கோயில் அண்ணனும் கோயில் அப்பனும் . (கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம்  )
மணவாளமாமுநிகளின் இருபக்கங்களில் கோயில் அண்ணனும் கோயில் அப்பனும் . (கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம் )

மணவாளமாமுநிகளின் மற்றுமோர் சிஷ்யரான எறும்பியப்பா மணவாளமாமுநிகளின்  அன்றாட வழக்கங்களைக் கொண்டாடும் தனது பூர்வ தினசர்யையில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக சாதிக்கிறார் ,

பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ
விந்யஸ்யந்தம் நைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே  (பூர்வ தினசர்யை  4 )

இந்த சுலோகத்தில் எறும்பியப்பா மணவாளமாமுநிகளை  பார்த்து இவ்வாறாகக் கூறுகிறார் , “தேவரீரின் அபிமான சிஷ்யர்களை (கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் ) இருபுறங்களிலும் தேவரீரின் திருக்கரங்களான தாமரைகளாலே பிடித்து, தேவரீரின் திருவடித்தாமரைகளை மேதினியில் மெல்ல மெல்ல ஊன்றி எழுந்தருளுகிறீர் “. 

தினசர்யைக்கான தனது வியாக்யானத்தில், திருமழிசை அண்ணாவப்பங்கார், “இந்த சுலோகத்தில் இரண்டு அபிமான சிஷ்யர்கள் என்று எறும்பியப்பா கோயில் அண்ணனையும் கோயில் அப்பனையும்  குறிப்பிடுகிறார்”, என்று கோடிட்டு காட்டுகிறார் . பாஞ்சராத்திர தத்வ சம்ஹிதை, “ஒரு சந்நியாசி எப்பொழுதும் தனது த்ரிதண்டத்தை பிடித்துக்கொண்டே இருக்கவேண்டும் ” என்று கூறுகிறது. “இவ்வாறு இருக்க , மணவாளமாமுநிகள் த்ரிதண்டம் இன்றி எழுந்தருளி இருக்கலாமோ ?” என்ற கேள்வி எழுமின் , அதற்கு திருமழிசை அண்ணாவப்பங்கார் கீழ்க்கண்டவாறு சமாதானங்கள் அளிக்கிறார் : 

  • முற்றிலும் உணர்ந்ததோர் சந்நியாசி த்ரிதண்டம் இன்றி இருத்தல் ஓர் குறை அல்ல .
  • எப்பொழுதும் பகவத் த்யானத்தில்  ஈடுபட்டிருப்பவராய் , நன்நடத்தை  உடையவராய், தன்  ஆசாரியனிடமிருந்து அனைத்து சாத்திரங்களையும் கற்றவராய் , பகவத் விஷயத்தில் அறிவுமிக்கவராய் , புலன்களையும் சுற்றங்களையும்  வென்றவராய் எழுந்தருளி இருக்கக்கூடிய ஒரு சந்நியாசிக்கு த்ரிதண்டம் உள்ளிட்டவையோடு இருத்தல் கட்டாயம் அல்ல.
  • எம்பெருமான் முன்னிலையில் தெண்டன் இடும் வேளையில் த்ரிதண்டம் அதற்கு இடையூறாக இருக்கக் கூடும் . அதனால் பெரிய ஜீயர் த்ரிதண்டம் இன்றி எழுந்தருளியிருக்கலாம் .

கோயில் அண்ணனின் பெருமைகள் எல்லாம் அறிந்த பலர் , அவரிடத்திலே தஞ்சம் அடைய விரும்பினர். “காவேரி தாண்டா அண்ணனாய் ” ,கோயில் அண்ணன் எழுந்தருளி இருந்ததால் , அவர் தனது திருத்தம்பியாரான கோயில் அப்பனை , பல இடங்களுக்கு சென்று அனைவரையும் திருத்தி பணிகொள்ள நியமித்தார். இதனை சிரமேற்கொண்டு கோயில் அப்பன் தானும் திருவரங்கத்திலிருந்து  பல இடங்களுக்கு சென்று பலரை பணி கொண்டார்.

பொய்யிலாத மணவாளமாமுநிகளின் அபிமான சிஷ்யரான கோயில் கந்தாடை அப்பனின் வைபவங்களில் சிலவற்றை அனுபவித்தோம். நாமும் இவரின் ஆசார்ய அபிமானத்தில் சிறிதேனும் பெற இவர் திருவடிகளை வணங்குவோம் !!

கோயில் கந்தாடை அப்பன் சுவாமியின் தனியன்:

வரதகுரு சரணம் சரணம் வரவரமுநிவர்ய கணக்ருபா பாத்ரம் |
ப்ரவகுண ரத்ண ஜலதிம் ப்ரநமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||
தேசிகம் ஸ்ரீநிவாஸாக்யம் தேவராஜகுரோஸ்ஸுதம் |
பூஷிதம் ஸத்குணைர்வந்தே ஜீவிதம் மம  ஸர்வதா||

அடியேன் ராமனுஜதாசன்
எச்சூர் ஸ்ரீநிவாசன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/09/30/koil-kandhadai-appan-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

4 thoughts on “கோயில் கந்தாடை அப்பன்”

Comments are closed.