தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

thondaradipodi-azhwar-mandangudi

திருநக்ஷத்ரம்: மார்கழி, கேட்டை

அவதாரஸ்தலம்: திருமண்டங்குடி

ஆசார்யன்: விஷ்வக்சேனர்

பிரபந்தங்கள்: திருமாலை, திருப்பள்ளியெழுச்சி

பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

நஞ்சீயர் தம் திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானத்தில் “அநாதி மாயயா ஸுப்த:” என்கிற கணக்கிலே ஸம்ஸாரத்திலே கிடந்த ஆழ்வாரை எம்பெருமான் மயர்வற மதிநலமருளி விழிப்பித்தான் என்கிறார். ஆழ்வாரே, பின்பு யோக நித்ரையிலிருக்கும் எம்பெருமானைத் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பினார்.

பெரியவாச்சான்பிள்ளை ஆழ்வாரின் பெருமைகளை அவரது பாசுரங்களாலேயே , தம் திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யான அவதாரிகையில்  காட்டுகிறார். ஆழ்வார் உணர்ந்து பெரிய பெருமாளை  ஸேவிக்கச் செல்கையில் அவர் இவரது க்ஷேம லாபங்களைப் பேசாது, திருக்கண் வளர்ந்திருந்தார். ஆனது பற்றி எம்பெருமானுக்கு ஆழ்வார்பால் ஆதாரம் இல்லை என்றாகாது, ஆழ்வார் அவனுக்கு மிக உகந்தவராதலால்.  ஆகில் ஶரீர உபாதையால் எம்பெருமான் உபேக்ஷித்திருந்தான் எனவும் ஆகாது, அவன் ஶரீரம் தமோ குணங்களற்ற திவ்ய தேஜோமய பஞ்சோபநிஷத்மய  திவ்ய ஶரீரம். பெரியபெருமாள் இந்த ஆழ்வாரைப் போன்றே சேதனர் அனைவரையும்  எங்கனம் நெறிப்படுத்துவம் என நினைந்தே விழிகள் மூடியிருந்தனன். ஆழ்வாரிடம் இக்குணங்களிருந்தன:

  • அவர் பிரக்ருதி ஸம்பந்தம் ஜீவனுக்குத் தகாது என்று உணர்ந்திருந்தார் எனவேதான் “ஆதலால் பிறவி வேண்டேன்” என்றார்.
  • அவர் ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பெற்றிருந்தார் ஆகவே, “போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம்”=பாகவத ஶேஷம் அவர்களே தருவராகில் உணவாக உட்கொள்ள உசிதம் என்றார்.
  • லௌகிக பாரமார்த்திக ஐஸ்வர்ய பேதம் நன்குணரப் பெற்றிருந்ததால், “இச்சுவை தவிர அச்சுவை பெறினும் வேண்டேன்” என்றார்.
  • இந்த்ரிய நிக்ரஹம் கைவரப் பெற்றிருந்ததால், “காவலில் புலனை வைத்து” எனப் புலன்களை அடக்கியது சொன்னார்.
  • தாம் கர்ம யோகாதிகளை உபாயங்களாகக் கருதாது கை விட்டதை, “குளித்து மூன்றனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒழித்திட்டேன்” என்றார்.
  • அவர்க்கு உபாய யாதாத்ம்ய ஞானம் (உண்மையில் உபாயம் எதுவோ அது பற்றி) முழுதாகக் கைவரப் பெற்றிருந்ததால் “உன் அருள் என்னும் ஆசைதன்னால் பொய்யனேன் வந்து நின்றேன்” என்றார்.

இறுதியாகப் பெரியவாச்சான்பிள்ளை ஆழ்வாரின் இத்திருக்குணங்களால் எம்பெருமானுக்கு மிக்க அணுக்கரானார், “வாழும் சோம்பரை உகத்தி போலும்” என அவரே சாதித்தாப்போல்  வேத மார்க்கம் அறிந்து தம் கைநிலை ஒன்றுமில்லை என ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் உடையார்போல் ஆழ்வாரை உகந்தான் எம்பெருமான்.

மாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தின மாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை மாமறையோன் என்றும், வேதத்தின் உட்பொருளை உணர்ந்தவர்களால் கொண்டாடப்படுபவர் என்றும் போற்றுகிறார். ஆழ்வாரின் அர்ச்சாவதார அனுபவத்தை http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-thondaradippodi.html என்னும் பதிவில் காணலாம்.

இனி ஆழ்வார் திவ்ய சரித்திரம்.

ஆழ்வார் ஸுத்த ஸத்வ நிஷ்டராக நம்பெருமாளின் கருவிலே செய்த திருவருளோடு விப்ரநாராயணர் எனும் பெயரோடு பிறந்து, க்ரமமாக ஸம்ஸ்காரங்கள் பெற்று நம்பெருமாள் அருளால் திருவரங்கமே நித்ய வாசமாகப் பெற்று அவன் அழகிலீடுபட்டு பக்தி பாரவச்யராய் இருந்தார். ஒரு நந்தவனம் சமைத்து,  கண்ணனுக்கும் நம்பி மூத்தோனுக்கும்  முன்பு மாலாகாரர் போலே பேரன்போடு பெரிய பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார்.

ஒருநாள் அழகியான திருக்கரம்பனூர் வேசி தேவதேவி உறையூரிலிருந்து தன் ஸஹோதரியோடு வந்தவள் ஆழ்வார் நந்தவனம் புக்கு, ஆங்கிருந்த செடி கொடிகள் மலர்க்கூட்டங்களால் மனம் கவரப்பட்டாள்.

அப்போது தூய ஆடையும் ஊர்த்வ புண்டரங்களும்  தரித்து எழில்மிகு தோற்றத்தோடு தோட்டவேலைக்கான ஸாமக்ரியைகளோடு விப்ர நாராயணர் தம் வேலையிலேயே ஈடுபட்டிருக்கக்கண்டவள் தன ஸஹோதரியிடம், ”அடி இவ்வாணழகர் ஆணோ அலியோ நம் அழகைக் கணிசிக்கவில்லையே” என்றாள். பின் அவள் அவர் அருகில் சென்று வணங்கி, எம்பெருமானுக்கு அந்தரங்க கைங்கர்யம் செய்யும் பாகவதருக்குத் தான் ஶரணடைய விரும்புவதைச் சொன்னாள். அவள் உடன் இருந்த தோழிகள் அவர் நம்பெருமாளின் தொண்டர் என்றும் அவளிடம் எவ்வித ஈடுபாடும் கொள்ள மாட்டார் என்றும் கூறினர். அவர்கள் அவளிடம் ஆறு மாதத்திற்குள் அவரை மயக்கி தன் வசத்தில் கொண்டு வந்தால் தாங்கள் அவளைப் பேரழகி என்று இசைந்து அவளுக்கு ஆறு மாத காலம் அடிமை செய்வோம் என்றனர். தேவ தேவியும் அப்பந்தயத்திற்கு இசைந்தாள். தேவ தேவியும் அப்பந்தயத்திற்கு இசைந்து தன்னுடைய விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களைத் துறந்து, ஸாத்விக உடை அணிந்து, அவரிடம் சென்றாள்.

பின் அவள் அவர் அருகில் சென்று வணங்கி, எம்பெருமானுக்கு அந்தரங்க கைங்கர்யம் செய்யும் பாகவதரைத் தான் ஶரணடைய விரும்புவதைச் சொன்னாள். அவர் மாதுகரம் பெற்று வரும்வரை தான் காத்திருப்பதாய்ச் சொல்ல அவரும் இசைந்தார்.

ஒருநாள் தேவதேவி நந்தவனத்தில் வேலையிலிருந்தபோது மழை பெய்தது. அவள் முழுவதும் நனைந்துவிடவே, விப்ர நாராயணர் தம் மேல் உத்தரீயத்தை அவளுக்குத் தந்தார். இருவரும் நெருக்கமாயினர்.  அதன்பின் இருவரும் நெய்யும் நெருப்பும்போல் இணைந்தனர். மறுநாள் அவள் தன் பழைய நகைகளையும் உடைகளையும் கொணர்ந்து அணியலானாள். அதன்பின் விப்ரர்   கைங்கர்யத்தையும் முழுதும் மறந்து அவளிடம் ஶரணாகதரானார். அவள் அவர் செல்வம் முழுதும் கவர்ந்துகொண்டு அவரை வெளியேற்றினாள். அவர் மனம் வருந்தி அவள்மீதே பித்தாய் அவள் வீட்டு வாயிலிலேயே கிடந்தார். அப்போது லீலார்த்தமாகப் பெரிய பெருமாளும் பெரிய பிராட்டியும் அவ்வீதி வழியே செல்ல, பிராட்டி பெருமாளிடம் இவர் ஏன் வேசி  வீட்டு வாயிலில் கிடக்கிறார் எனக் கேட்க, பெருமாள் நம் கைங்கர்யபரன் விப்ர நாராயணன் இப்போது இவளிடம் பித்தேறி இங்கே கிடக்கிறான் என்ன, பிராட்டி புருஷகாரம் செய்யுமுகமாக, “நீர் இவனை விஷய ப்ரவணன் ஆனபோதிலும் இப்படி விடலாமா? இவன் மாயையை நீக்கி நம்மிடம் சேர்த்துக்கொள்ளும்” என்றாளாக எம்பெருமானும் இசைந்தனன்.

பெருமாள் தன் ஸந்நிதிப் பஞ்சபாத்ரம் ஒன்றை எடுத்து அந்த வீடு சென்று அவளிடம் நான் விப்ர நாராயணன் சீடன் அழகிய மணவாளன், இது அவர் உனக்குத் தந்த அன்பளிப்பு என்று தர, அவளும் அந்தத் தங்கப் பாத்திரம் பெற்று அவரை உள்ளே வரவிடு  என, எம்பெருமான் இவரிடம் “ஸ்வாமீ அவள் உம்மை உள்ளே அழைக்கிறாள்” என்ன அவர் உள்ளே சென்றதும் அவள் பழையபடி அவரைக்  கொஞ்சத் தொடங்கினள். எம்பெருமான் தன் ஸந்நிதிக்குத் திரும்பி, மீளவும் பைந்நாகணையில் ஸயநித்துக் கொண்டான்.

மறுநாள் ஸந்நிதி திறந்ததும் கைங்கர்யபரர்கள் தங்கப் பஞ்சபாத்ரம் காணாமல் போயிற்றென்று தெரிந்து அரசனிடம் கூற, அவன் அவர்கள் கவனக் குறைவைக் கடிந்துகொண்டான். நீர் கொணரக் கேணிக்குச் சென்ற ஒரு தாதிப் பெண் அரசன் சினம் தன கணவன் மேல் வடியுமோ என அஞ்சிப் பேசினள். அவள் விப்ர நாராயணன் ஶிஷ்யன் அழகிய மணவாளன் என்பான் ஒரு தங்கவட்டில் வேசிக்குக் கொடுத்ததாகக் கூற, இதைக் கைங்கர்யபரர் வழி அறிந்த அரசாங்க ஆட்கள் விப்ரரை உடனே கண்டுபிடித்துச் சிறையிலிட்டனர். தேவதேவி வீட்டிலிருந்து வட்டிலைக் கைப்பற்றி அவளை விசாரிக்க, அவள், யான் அறியேன் விப்ரரின் ஆளான அழகிய மணவாளன் அவர் அனுப்பியதாகத் தந்தான் என்ன, ஆகிலும் நீ கோயில் வட்டிலை வாங்கலாமோ என அவர்கள் கேட்க, அது பெருமாள் வட்டில் என்பது எனக்குத் தெரியாது என்றாள். விப்ரநாராயணரோ தனக்கு அழகிய மணவாளன் என்கிற சீடனும் இல்லை தன்னிடம் தங்க வட்டிலும் இருந்ததில்லை என்கிறார். அரசன் வட்டிலைக் கோயிலுக்குத் திரும்பத் தந்து, வேசியை அபராதம் கட்டச் சொல்லிப் பின்பு  விடுவித்து விப்ரரைச் சிறையிலே இட்டனன்.

இந்நிலையில் பிராட்டி வேண்ட எம்பெருமான் அரசன் கனவில் வந்து விப்ரன் என் அடியான், அவனை வழிப் படுத்தவே இந்த விளையாட்டு என்னவும், அரசன் உடனே அவருக்கு எல்லா நிகழ்வும் சொல்லி, விடுவித்து அபராத க்ஷமாபனம் செய்துகொண்டனன். விப்ர நாராயணரும் தன்னுடைய தவறைத் உணர்ந்து, எம்பெருமான் தனக்குச் செய்த பேருபகாரத்தை நினைத்து உருகி, அனைத்து ஆசைகளையும் துறந்து, அனைத்துப் பாபங்களுக்கும் ப்ராயச்சித்தமான பாகவத ஸ்ரீபாத தீர்த்தத்தை உட்கொள்கிறார்.

இதன்பின் விப்ர நாராயணர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் என்றே புகழ் பெற்றார். தம் பாகவத ஶேஷத்வ ஸ்வரூபம் தோன்றப் பெயரும் பெற்ற ஒரே ஆழ்வார் இவரே. திருவடி, லக்ஷ்மணன், நம்மாழ்வார் போலே இவரும் “இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்” – பரமபதமும் வேண்டா கைங்கர்யமே தலை, பெரிய பெருமாள் சேவையே ப்ரதானம் என்றிருந்தார்.  உபகார ஸ்ம்ருதி எனும் நன்றி கூறலாகிய உத்தம தரமும் இவரே காட்டியருளினார், பாசுரம்தொறும் எம்பெருமானை நினைந்தும் அவன் தமக்குச் செய்த பெருங்கருணையைப் பாடியும் வித்தரானார். இவரது அசைக்கவொண்ணா பக்தி கண்டு எம்பெருமான் தன பரத்வாதி பஞ்சகமும் (http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html) காட்டியருளினான். தேவதேவியும் பிழை உணர்ந்து தன பொருள் முழுதும் பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்து, தானும் கைங்கர்யத்தில் மூழ்கினாள்.

ஆழ்வார் பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி பெற்று, பெரிய பெருமாளே எல்லாம் என்று உணர்ந்து, பெரிய பெருமாளைத் திருமந்திர அநுஸந்தானம் மூலமும், நாம ஸங்கீர்த்தனம் மூலமும் நித்யமாக அநுபவித்து வந்தார்.  நம்மாழ்வார் மங்கவொட்டுன் மாமாயையில் அனைத்துப் பிரகிருதி தத்வங்களும் தடை என்றாப்போலே இவரும் “புறம் சுவர் ஓட்டை மாடம்” என்று ஶரீரத்தின் ஹேயதையைச் சொன்னார். யமனைக் கண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் அஞ்ச வேண்டாம் என்றும் யமபடர்கள் ஸ்ரீவைஷ்ணர்களைக் கண்டால் வணங்கிப்போவார்கள் என்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள் மற்ற ஸ்ரீவைஷ்ணாவர்களையே வணங்கிப் போவர்கள் என்றும் அறுதியிடுகிறார். ஸௌநகர் ஸதாநந்தருக்கு நாம ஸங்கீர்த்தன மகிமையை உரைத்ததுபோல் ஆழ்வார் பெரிய பெருமாள் திருமுன்பு அவன் திருநாம வைபவத்தைத் திருமாலையில் பரக்க உரைக்கிறார். திருமாலை திவ்ய ப்ரபந்தத்தில் நாம ஸங்கீர்த்தன மகிமை, பாகவத ஶேஷத்வம், அநந்ய கதித்வம், அநந்யார்ஹத்வம், பாகவதர் மேன்மை முதலானவை பரக்கக் காட்டினார். மேம்பொருள் பாசுரத்தில் எம்பெருமானே உபாயம் என்பதைத் தெளிவாக விளக்கினார். “மேம்பொருள்” பாசுரத்துக்கு மேல்பட்ட பாசுரங்கள் என லோகாசார்யர் திருமாலையின் ஸாரத்தை பாகவத ஶேஷத்வம் மற்றும் பாகவத கைங்கர்யம் எனக் காட்டுவர். ஆழ்வார் தம்மை உணர்த்தியருளிய பெரிய பெருமாளுக்குத் தம் உபகார ஸ்ம்ருதியாக மிக அழகிய திருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களைப் பணித்தருளினார். இதிலும் பாகவத ஶேஷத்வ காஷ்டையை விளக்குமாறு, “உன்னடியார்க்கு ஆட் படுத்தாய்” என்றே எம்பெருமானை வேண்டினார். இப்படி லோகத்தை வாழ்வித்தருளினார்

தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனியன்:

தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேஶயம் ராஜவதர்ஹணியம்
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே

தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழி திருநாமம்:

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அர்ச்சாவதார அனுபவம்: http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-thondaradippodi.html

தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2013/01/08/thondaradippodi-azhwar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org/index.php
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org