பிள்ளை லோகம் ஜீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

pillailokam-jeeyar

திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம் (ச்ரவணம்)

அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்

ஆசார்யன்: சடகோபாசார்யர்

அருளிச் செய்தவை: தனியன் வ்யாக்யானங்கள், ராமானுஜ திவ்ய சரிதை, யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம், இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம், மாமுனிகளின் அநேக ஸ்ரீஸுக்திகளுக்கு வ்யாக்யானங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கு வ்யாக்யானங்கள், மாமுனிகளின் வாழித்திருநாமம் – “செய்ய தாமரை தாழிணை”க்கு வ்யாக்யானம், ஸ்ரீ வைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷம் ஆகியவை.

காஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்)  கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.

இவர் திருகடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் (மஹாபலிபுரம் – மாமல்லபுரம்)  ஆலயத்தை புதுப்பித்து, கோவிலில் முறையான வழிபாடு செய்வதையும் நிலை நிறுத்தினார். இதற்காக மன்னரால் கௌரவிக்கப்பட்டு இன்றும் இவருடைய சந்ததியினர் அந்தச் சிறப்பு  கௌரவத்தை  கோவிலில் பெற்று வருகிறார்கள்.

மேலும் இவர் பெரிய பண்டிதரும் வரலாற்றாசிரியரும் ஆவார். இவருடைய வாழ்க்கையைப்  பற்றி அதிகம் தெரியவில்லையாயினும் நம்முடைய ஸம்ப்ரதாயத்திற்கு இவர் அளித்துள்ள பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

இவர் திவ்யதேசங்களுக்கு செய்த உபகாரங்களை சில கல்வெட்டுகளில் காணலாம்.

  • திருகடல்மல்லை திவ்யதேசத்தில் கி. பி. 1614 என்ற வருடத்தை பொறிக்கப்பட்ட உள்ள ஒரு தாமிரத் தட்டில், இந்த ஜீயரை யதீந்திர ப்ரவண ப்ரபாவம் ஜீயர்  என்று அழைக்கப்பட்ட  குறிப்பு உள்ளது (இதிலிருந்து அக்காலத்திலேயே இவர் மணவாள மாமுனிகளின் சரித்திரத்தை எழுதியவரென்று மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் அறியப் பட்டார் என்பது தெளிவாகிறது).
  • ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது ப்ரகாரத்தில்  கி.பி. 1614 என்ற வருடம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், பிள்ளை லோகம் ஜீயருடைய சிஷ்யர் ஒருவர் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரத்தன்று பக்தர்களுக்கு சக்கரைப்பொங்கல் விநியோகத்திற்கு 120 பொற்காசுகளை மூலதனமாக கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது.

திவ்ய ப்ரபந்தங்களின் பெரும்பாலான தனியன்களுக்கு இவர் வ்யாக்யான உரை அருளிச் செய்துள்ளார். இந்த வ்யாக்யான உரையானது தனிப்பட்ட ப்ரபந்தங்களின் முக்கியமான அம்சங்களை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல் அந்தந்த  திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த ஆழ்வாரின் மனநிலையை உணர்ந்து எழுதப்பட்டவையாகும்.

இவர் அருளிச்செய்த ராமாநுஜார்ய திவ்ய சரிதையில், எம்பெருமானாரின் வாழ்க்கை வரலாறு மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கிரந்தத்தில் எம்பெருமானாரின் பல்வேறு யாத்திரைகள், அவருடைய சிஷ்யர்களுடன் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நன்றாகக் காட்டப்பட்டுள்ளன.

மேலும்  யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் மற்றும் சிலருடைய புகழ் மிக்க வாழ்க்கை வரலாற்றை அழகாக இவர் அருளிச் செய்துள்ளார். மாமுனிகளின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விரிவாக கொடுத்தது மட்டுமல்லாமல் மாமுனிகளின் உபதேசங்களை இந்த கிரந்தத்தில் அழகாக கூறியுள்ளார்.

ராமாநுஜார்ய திவ்ய சரிதையிலும் யதீந்திர ப்ரவண ப்ரபாவத்திலும் அதிகம் தமிழ் பாசுரங்கள் நிறைந்திருப்பதிலிருந்து தமிழ் மொழியில் இவருக்கு உள்ள ஞானம் தெரிய வருகிறது.

ரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கும் இவர் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

விளாஞ்சோலைப் பிள்ளையின் ஸப்த காதைக்கு இவர் மிகவும் அற்புதமான வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார். ஸப்த காதை பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்திரத்ரத்தின் ஸாராம்சத்தை (ஆசார்ய நிஷ்டை)   வெளிக்கொணர்ந்து காண்பிக்கும் நூலாகத் திகழ்கிறது.

மாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியான உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி மற்றும் ஆர்த்தி ப்ரபந்தம் ஆகியவற்றிற்கு விரிவான வ்யாக்யானங்கள் அருளிச் செய்துள்ளார்.

இவர் எம்பெருமானார் தரிசனத்திற்கு (நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான விதிமுறைகளை, கோட்பாடுகளை) ஸ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷம் என்கின்ற மிகவும் அற்புதமான உரைநடை கிரந்தத்தை அருளிச் செய்துள்ளார். இந்த கிரந்தத்தில் நிறைய ப்ரமாணங்களை மேற்கோள் காட்டுவதிலிருந்து பிள்ளை லோகம் ஜீயருக்கு சாஸ்திரத்தில் உள்ள ஆழ்ந்த ஞானத்தை உணர்ந்து கொள்ளலாம்.

இது வரை நாம், பிள்ளை லோகம் ஜீயரின் பெருமை மிக்க வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம்.

பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளுக்கு மிகவும் விரிவான வ்யாக்யானங்களை அருளிச் செய்தது, எம்பெருமானார் மற்றும் மணவாள மாமுனிகளின் சிறப்பு மிக்க வாழ்க்கையை ஆவணம் செய்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்கு  பெரும் தொண்டு  புரிந்துள்ளார். நாமும் இது போல் எம்பெருமானார் மற்றும் மாமுனிகளிடம் அன்புடையவராய்  இருக்க இவரது  திருவடித் தாமரைகளில் பிரார்த்தனை செய்வோம்.

பிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)

ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்:  http://acharyas.koyil.org/index.php/2013/04/08/pillai-lokam-jiyar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org