பின்பழகிய பெருமாள் ஜீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

nampillai-goshti1நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி – பின்பழகிய பெருமாள் ஜீயர் இடமிருந்து இரண்டாவது

nampillai-pinbhazakiya-perumal-jeer-srirangam நம்பிள்ளை திருவடிகளில் பின்பழகிய பெருமாள் ஜீயர், ஸ்ரீரங்கம்

திருநக்ஷத்ரம் : ஐப்பசி சதயம்

அவதார ஸ்தலம் : திருப்புட்குழி

ஆசார்யன் : நம்பிள்ளை

பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்

அருளிய க்ரந்தங்கள் : 6000  படி குரு பரம்பரா ப்ரபாவம். வார்த்தாமாலை என்ற கிரந்தத்தையும் இவர் அருளினார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

நம்பிள்ளையின் ஆத்மார்த்தமான சிஷ்யர்களில் பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருவர். இவர் பின்பழகராம் பெருமாள் ஜீயர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தம்முடைய 6000 படி குருபரம்பரை ப்ரபாவத்தில் அவர் நம்முடைய ஆழ்வார்  ஆசார்யர்களின் சரித்திர விவரங்களைப்  பற்றி குறிப்பிட்டுள்ளார். ஸந்யாஸியான நஞ்சீயர் எவ்வாறு க்ருஹஸ்தரான பட்டருக்குக் கைங்கர்யங்கள் செய்தாரோ அது போன்று பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஸந்யாஸி) நம்பிள்ளைக்கு (க்ருஹஸ்தர்) கைங்கர்யங்கள் செய்தார்.

ஒருமுறை பின்பழகிய பெருமாள் ஜீயர் உடல் நலம் சரில்லாமல் இருந்தார். அப்பொழுது அவர் மற்ற  சில ஸ்ரீவைஷ்ணவர்களிடம் தாம் விரைவில் குணமடைய வேண்டி எம்பெருமானிடம் பிரார்த்திக்கச் சொன்னார்.- இது நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசாரத்திற்கு விரோதமானது என்றும் நாம் ஒருபோதும் எம்பெருமானிடம்  எதற்காகவும் பிரார்த்திக்ககூடாது – நமது வியாதியிலிருந்து குணமடையக்கூடப் பிரார்த்திக்கக்கூடாது. ஜீயரின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்த நம்பிள்ளையின் சில சிஷ்யர்கள் நம்பிள்ளையிடமே இதைப் பற்றி விசாரித்தனர். இதற்கு நம்பிள்ளை சிஷ்யர்களைப் பார்த்து சில ஸ்வாமிகளிடம்  சென்று விசாரித்துத் தெரிந்து கொள்ளச் சொன்னார். அந்த வகையில் முதலில் எல்லா சாஸ்த்ரங்களிலும் நிபுணத்வம் பெற்ற எங்களாழ்வான் என்ற ஸ்வாமியிடம் சென்று கேட்கச் சொன்னார். அதற்கு எங்களாழ்வான் ஒருவேளை ஜீயருக்கு ஸ்ரீரங்கம் மீதுள்ள பற்றுதலாலும் இன்னும் சில காலம் அங்கு வாழ வேண்டும் என்ற ஆசையினாலும் இருக்கலாம் என்று கூறினார். அடுத்ததாக நம்பிள்ளை  தனது சிஷ்யர்களை திருநாராயணபுரத்து அரையரிடம் சென்று கேட்கச் சொன்னார். அதற்கு அவரும் ஒருவேளை ஜீயருக்கு இன்னும் தான் முழுவதுமாக முடிக்காத சில வேலைகள் இருந்திருக்கலாம் அவற்றை முடிக்கவேண்டும் என்பதற்காக இன்னும் சில காலம் வாழ விரும்பியிருக்கலாம் என்றார். அடுத்ததாக அம்மங்கி அம்மாளிடம் சென்று கேட்கச் சொன்னார். அவரும் ஒருவேளை ஜீயருக்கு நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியைப் பிரிய மனமில்லாது இன்னும் சிறிது காலம் இருந்து   நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியை அனுபவிக்க வேணுமென்று ப்ரார்த்தித்திருக்கலாம் என்றார். பின்பு நம்பிள்ளை தனது சிஷ்யர்களை பெரியமுதலியார் என்ற ஸ்வாமியிடத்து அனுப்பினார். அவரும் அதற்கு, அவர் ஒருவேளை நம்பெருமாளிடத்தில் கொண்ட அதீதமான பற்றுதலால் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே இருக்க விருப்பியிருக்கலாம் என்றார். இறுதியாக நம்பிள்ளை ஜீயரை அழைத்து மேற்கூறிய கருத்துக்கள் எதுவாவது அவருடைய எண்ணத்திற்கு ஒத்துப் போகிறதா என்று கேட்டார். அத்தகு ஜீயர், தேவரீருக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் தேவரீரின் கருணையினால அதை என்மூலமாகவே தெரியப்படுத்த நினைக்கிறீர்கள். அடியேன் தேவரீர் தினமும் ஸ்நானம் செய்து  விட்டு வந்தவுடன் தேவரீரின் திருமேனியைக் கண்குளிரப் பார்த்துவிட்டு தேவரீருக்கு ஆலவட்டம் வீசுதல் போன்ற சில கைங்கர்யங்களை செய்து கொண்டு இருக்கிறேன்  . அத்தகைய கைங்கர்யங்களை விட்டு அதற்குள் அடியேன் எதற்குப் பரமபதம் செல்ல வேண்டும்? அதனால் தான் இன்னும் சில காலம் தொடர்ந்து வாழ விரும்புவதாகக் கூறினார். இவ்வாறு  பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு சிஷ்யருக்கு இருக்கு வேண்டிய உயர்ந்த லட்சணத்தை வெளிப்படுத்தினார். அதாவது  ஒரு ஆசார்யனின் திருமேனியில் ஒரு சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய முழுப் பற்றுதல். இதைக்கேட்ட அனைவரும் நம்பிள்ளயிடத்து ஜீயர்க்கு இருந்த  பக்தியைப் பார்த்து ப்ரமித்தனர்.

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் என்பவரை நம்பிள்ளையின் சிஷ்யராக ஆக்கிய பெருமை இவரையே சாரும். இதைப் பற்றிய விரிவான விளக்கங்களை https://acharyas.koyil.org/index.php/2017/01/25/naduvil-thiruvidhi-pillai-bhattar/ என்ற இணைய தளத்தில் காணலாம்.

வ்யாக்யானங்களில் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் பற்றிய குறிப்புகள்:

  • உபதேச ரத்தின மாலை 65 & 66 – பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்யானம் – பரிபூரண சரணாகதியைப் பற்றியும் ஆசார்யனின் திருமேனியில் வைக்க வேண்டிய பக்தியைப் பற்றியும் பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்திரத்திலும்  (சூத்ரம் 333), மணவாள மாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தின மாலையிலும் (பாசுரம் 65 & 66) விளக்கியுள்ளார்கள். அதில் 66 வது பாசுரத்தில் பின்பழகிய பெருமாள் ஜீயர் தன்னுடைய ஆசார்யரான நம்பிள்ளையிடத்தில் கொண்ட பக்தியினால் தான் பரமபதம் போகவேணும் என்ற எண்ணத்தையே கைவிட்டார்  என்று  மாமுனிகள் குறிப்பிட்டுள்ளார். பிள்ளை லோகம் ஜீயர் பின்பழகிய பெருமாள் ஜீயரின் ஆசார்ய நிஷ்டையை, மதுரகவியாழ்வார் – நம்மாழவார், ஆண்டாள் – பெரியாழ்வார், வடுகநம்பி – எம்பெருமானார், மற்றும் மாமுனிகள் – திருவாய்மொழிப்பிள்ளை இவர்களோடு ஒப்பிடுகிறார். ப்ரபன்னர்களுக்கு இவர்கள்  தான் ஆசார்ய நிஷ்டை என்பதற்கே  உதாரண புருஷர்களாக  விளங்கினார்கள். மேலும் பிள்ளை லோகம் ஜீயர், அப்பிள்ளையின் யதிராஜ விம்சதி வ்யாக்யானத்தில் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் பற்றிய குறிப்பை அவர் நம்பிள்ளையைளை தன் ஸ்வாமியாகவும், புகலிடமாகவும் தம்முடைய குறிக்கோளாகவும் கொண்டதைக் காட்டுகிறார்.

வார்த்தா மாலை என்னும் நூலிலும் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன:

  • 2 – ஒரு முறை பின்பழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளையிடம் , ஸ்வரூபம் (ஜீவாத்மாவின் தன்மை), உபாயம் (வழி) மற்றும் உபேயம் (அடையவேண்டியது) பற்றிக் கேட்டார். நம்பிள்ளையும் அதற்கு ஜீவாத்மாவின் இச்சையே ஸ்வரூபம் என்றும், பகவானுடைய இரக்கமே உபாயம் என்றும், இனிமையே உபேயம் என்றும் பதிலுரைத்தார். ஜீயர் தாம் அதற்கு வேறு விதமாக எண்ணியிருப்பதாகக் கூற நம்பிள்ளை அதுகேட்டு ஆச்சர்யமுற்றார். ஜீயரும்  மிகவும் பவ்யமாகத் (தான் நம்பிள்ளையிடமிருந்து கற்றுக் கொண்டபடி) ஒரு ஸ்ரீ வைஷ்ணவனிடத்தில் சரணாகதி பண்ணுவதே தம் ஸ்வரூபம் என்றும்,  அவர்கள் நம்  மேல் வைக்கும் பற்றே  தம் உபாயம் என்றும், அவர்களுடைய ஆனந்தமே தம் குறிக்கோள் – உபேயம் என்றும் கூறினார். இது கேட்டு  நம்பிள்ளை மிகவும் ஆனந்தம் அடைந்தார்.  இவ்வாறாக தம்முடைய ஆசார்யன் முன்பாக பாகவத சேஷத்வத்தை நிர்ணயம் செய்தார்.
  • 69 – ஜீயர் த்வய மஹா  மந்திரத்தின்  அர்த்தத்தை நம்பிள்ளையிடம் கேட்டார். அதற்கு நம்பிள்ளை முதல் பகுதியில் நாம் ஸ்ரீமன் நாராயணனே நம்முடைய புகலிடம் என்றும், இரண்டாவது பகுதியில் நாம் பெருமாள் , பிராட்டி இருவருக்கும் சேர்த்து  கைங்கர்யம் செய்வதையே விரும்புகிறோம் என்றும், அந்த ஸ்ரீமன் நாராயணனே முழு ஆனந்தத்தை அடைபவன் என்றும் அதில் ஒரு சிறு துளியும் நமக்கு சுய லாபம் இருக்கக்கூடாது என்றும்  கூறினார். இவ்வாறாக சிஷ்யர்கள் ஆசார்ய நிஷ்டையோடு இருக்கவேண்டும். மேலும் ஜீயர் , பிராட்டி எப்பொழுதும் எம்பெருமானைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தால், ஜீவாத்மாவிற்கு அவள் எவ்வாறு உதவுவாள் என்று கேட்க நம்பிள்ளையும், எவ்வாறு எம்பெருமான் தான் எப்போதும் பிராட்டியின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய படைத்தல் முதலான  செயல்களைச் செய்து கொண்டிருக்கிறானோ அது போன்று பிராட்டியும் தான் பெருமானுடைய அழகில் மயங்கி அவனை அனுபவித்துக் கொண்டிருந்தாலும்  துன்பப்படும் ஜீவாத்மாக்களுக்காக அவள் விடாது எம்பெருமானிடம் சிபாரிசு பண்ணிக் கொண்டு அவர்களை ரக்ஷித்துக் கொண்டு தான் இருப்பாள், ஏனெனில் அவள் இயற்கையாகவே புருஷகார பூதை. என்று விளக்கினார்.
  • 174 – பின்பழகிய பெருமாள் ஜீயர்  தன்னுடைய ஆசார்யன் நம்பிள்ளைக்கு  கைங்கர்யம் பண்ண வேண்டித் தன்னுடைய உடல் நலம் காக்க ப்ரார்த்தித்தது பற்றி நாம் ஏற்கனவே இந்த  பகுதியில் பார்த்து விட்டோம்.
  • 216 – நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் நம்பிள்ளைக்கும்  பின்பழகிய பெருமாள் ஜீயருக்கும் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சம்பாஷணையைப் பற்றிக் கூறுகிறார். ஜீயர் நம்பிள்ளையிடம், ஒவ்வொரு முமுஷுவும் ஆழ்வாரைப் போன்றே எம்பெருமானையே முழுவதுமாகப் பற்றிக் கொண்டு அவனையே அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நாம்  இந்த லோக விஷயங்களில் பற்று வைத்துக் கொண்டு இருந்தோமேயானால் நமக்கு  எவ்வாறு பரமபதத்தில் கைங்கர்ய ப்ராப்தி கிட்டும் என்று வினவினார். அதற்கு நம்பிள்ளை, நமக்கு ஆழ்வாரைப் போன்று ப்ராப்தி இந்த சரீரத்தில் கிடைக்காவிட்டாலும், நம்முடைய ஆசார்யனின் பரிபூரண க்ருபையால் , நாம் மரணித்து பரமபதம் அடையும் போது  நமக்குள்ளும் பகவான் ஆழ்வாரைப் போன்றே எண்ணத்தையும் ஆசையையும் ஏற்படுத்தி  விடுவான். எனவே நாம் பரமபதம் அடையும் போது முற்றிலுமாகத் தூய்மையானவர்களாக மாறி எம்பெருமானுக்கு சாஸ்வதமாகக் கைங்கர்யம்  பண்ணவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடயே  இருப்போம் என்று விளக்கம் அளித்தார்.
  • 332 – பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு முறை நம்பிள்ளையிடம் கேட்டார். “ஒருவருக்கு  எதாவது கஷ்டங்கள்/துயரங்கள் ஏற்படும்போது அவர் ஒரு ஸ்ரீவைஷ்ணவனிடத்தில் சென்று ப்ரார்த்தித்தால் அது அவனுக்கு விலகி விடுகிறதே. அது பகவானின்  சக்தியாலா  அல்லது அந்த ஸ்ரீவைஷ்ணவனின் சக்தியாலா”  என்று கேட்க அது  பகவானின்  சக்தியாலேயே என்று பதிலுரைத்தார். அதற்கு ஜீயர்  நாம் என் அதற்கு பகவனிடத்திலேயே சென்று ப்ரார்திக்கக்கூடாதா என்று கேட்க நம்பிள்ளையும் அதற்கு “கூடாது, நாம் எப்போதும் ஒரு ஸ்ரீவைஷ்ணவனை முன்னிட்டுக்கொண்டே  பகவானிடம் செல்ல வேண்டும்” என்று கூறினார். மீண்டும் ஜீயர் நம்பிள்ளையிடம் “பகவான் ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் எண்ணத்தை நிறைவேற்றியதற்கு ஏதாவது ப்ரமாணம் உண்டா” எனக் கேட்க நம்பிள்ளையும்  “அர்ஜுனன் போரில் ஜயத்ரதனை மாலை ஸூர்ய அஸ்தமனத்திற்குள் கொன்று விடுவதாக சபதம் எடுக்க , ஸர்வேச்வரனும் தான் அந்த யுத்தத்தில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று ஸங்கல்பம் செய்ததை மீறித் தன்னுடைய  ஸுதர்சன சக்கரத்தால் சூரியனை மறைத்தார். இதைப் பார்த்த ஜயத்ரதனும் ஸூர்ய அஸ்தமனம் ஆகிவிட்டது என்று வெளியே வர, பகவான் சட்டென்று தன்னுடைய சக்ராயுதத்தைத் திரும்பப் பெற சூரியன்  இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை என்று அறிந்து கொண்ட அர்ஜுனன்  ஜயத்ரதனை முடித்தான். இதிலிருந்து நாம் எம்பெருமான் ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் வார்த்தைகளை கண்டிப்பாக முடித்து வைப்பான் என்றும், நாம் எப்பொழுதுமே ஒரு ஸ்ரீவைஷ்ணவனை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானிடம் செல்ல வேண்டும்” என்று கூறினார்.

இவ்வாறாக நாம் பின்பழகிய பெருமாள் ஜீயர் பற்றி ஒரு சில விஷயங்களை அறிந்து கொண்டோம். அவர் மிகச் சிறந்த ஞானஸ்தர். நம்பிள்ளையின் மிக அபிமான சிஷயர். நாமும் ஜீயரின் திருவடித்தாமரைகளில் பணிந்து அவரைப் போன்று சிறு துளியாவது பாகவத நிஷ்டை  பெற ப்ரார்த்திப்போம்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் தனியன்

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குறும் பஜே ||

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2013/04/21/pinbhazhagiya-perumal-jiyar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org