திருக்குருகைப்பிரான் பிள்ளான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

திருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம் (ஆவணி மிருகசீர்ஷம் என இவருடைய தனியன் ஒன்றிலிருந்து தெரிய வருகிறது)

அவதார ஸ்தலம்: ஆழ்வார் திருநகரி

ஆசார்யன்: எம்பெருமானார்

அருளிச்செய்தவை: திருவாய்மொழி 6000 படி வ்யாக்யானம்

பிள்ளான், பெரியதிருமலை நம்பியின் சிறப்பு வாய்ந்த திருக்குமாரர் ஆவார்.  குருகேசர், குருகாதிநாதர் என்றும் இவர் அறியப்படுகிறார். எம்பெருமானாரே இவருக்கு இந்தத் திருநாமத்தைச் சாற்றி, திருவாய்மொழிக்கு முதல் வ்யாக்யானத்தை எழுதுமாறு பணித்தார். இதுவே ஆறாயிரப்படி என்று பிரசித்தி பெற்று விளங்குகிறது.

எம்பெருமானார்  குருகைப்பிள்ளானை, தன் மானஸ  புத்திரராக  (அபிமான  – அன்புக்குப்பாத்திரமான குமாரராக) கருதினார். ஒருமுறை எம்பெருமானாரின் சிஷ்யர்கள் பிள்ளானை எம்பெருமானரிடம் சென்று திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் எழுதும்படி கேட்கச் சொன்னார்கள். பிள்ளானும் எம்பெருமானரிடம் தண்டன் சமர்ப்பித்து  “தேவரீர் ஸ்ரீபாஷ்யம் எழுதியுள்ளீர் , எல்லா இடத்திற்கும் யாத்திரை மேற்கொண்டு விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தியுள்ளீர், நாங்கள் இப்பொழுது தேவரீரை ஆழ்வாரின் பாசுரத்திற்கு  வ்யாக்யானம் எழுதி (மற்றவர்கள் அதைத் தவறாக அர்த்தம் செய்யாமல் இருப்பதற்கு)  மற்றும் அதை பாதுகாக்கும்படி ப்ரார்த்திக்கிறோம்” என்று விண்ணப்பித்தார். அதற்கு எம்பெருமானார் “இது மிக அவசியமே, ஆனால், அதை நான் எழுதினால், வித்வான்கள் அல்லாதவர் ஆழ்வாரின் அருளிசெயல்கள் அவ்வளவே என்று கருதலாம் மற்றும் மற்றவர்கள் இதற்கு மேலும் வ்யாக்யானம் செய்யத் தயங்கலாம். இது ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்த ஆழ்வாரின் சிறந்த அருளியச்செயலுக்கு குற்றமாகிவிடும். ஏனென்றால் பிற்காலத்தில்  அதிகார பூர்வமான பல ஆசார்யர்களால் சிறந்த வ்யாக்யானங்கள் வழங்கப் படவிருக்கலாம். ஆகையால், திருவாய்மொழியின் முதல் வ்யாக்யானத்தை ஆறாயிரம் ச்லோகம் உடைய விஷ்ணு புராணத்திற்கு இணையாக இருக்கும்படியான வ்யாக்யானம் அருளிச் செய்வதற்கு அடியேன் உமக்கு அனுமதி அளிக்கிறேன்” என்று கூறினார். இவ்வாறு எம்பெருமானாரின் அனுமதியுடன் பிள்ளான் ஆறாயிரப்படி வ்யாக்யானத்தை அருளிச்செய்ய, பின்னர்  இதையே பட்டர் நஞ்சீயருக்கு உபதேசத்தருளினார்.

055_4762658378_lஎம்பெருமானாரின் ஆசிர்வாதத்தால் மற்றும் அவருடைய மேற்பார்வையில் நடந்த பிள்ளானின் திருமணம்

பிள்ளான் ஸ்ரீபாஷ்யம் மற்றும் பகவத் விஷயத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். பிள்ளான்  ஒருமுறை சிறுப்புத்தூரில் இருக்கும்போது, சோமாசியாண்டான்  இவரிடம் மூன்று முறை ஸ்ரீபாஷ்யத்தை கற்றுக் கொண்டார். சோமாசியாண்டான் பிள்ளானிடம் தனக்கு சிறந்த அறிவுரையை  உபதேசிக்குமாறு விண்ணப்பித்தார். பிள்ளான் சோமாசியாண்டான்க் குறித்து  நீர் “ பட்டர் பிரபாகர மீமாம்ஸைபோன்ற பிற ஸித்தாந்தங்களை விளக்க வல்லவர், ஸ்ரீபாஷ்யத்திற்கு ப்ரவர்த்தகர் என்று மேன்மை பாராட்டித் திரியாதே  எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிரும்” என்று அருளினார்.

எம்பெருமானார் திருநாட்டிற்கு எழுந்தருளும்போது, எம்பெருமானார் கிடாம்பி ஆச்சான், கிடாம்பி பெருமாள், எங்களாழ்வான், நடாதூராழ்வான் ஆகியோரை அழைத்து, பிள்ளானிடம் சரணடையும் படியும்,  அதே சமயத்தில் பிள்ளானிடம் இவர்களை வழி காட்டும் படியும் சொன்னார். மேலும் எம்பெருமானார் தன் காலத்துக்குப்பின் பட்டரை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தலைமை வகித்து பிள்ளான் உட்பட எல்லோருக்கும் வழி காட்டியாக இருக்கச் சொன்னார். பிள்ளான் எம்பெருமானாரின் அபிமான குமாரர் ஆதலால் சரம கைங்கர்யத்தை அவரே முன்னின்று நடத்தினார்.

நமது வ்யாக்யானங்களில், திருக்குருகைப்பிரான் பிள்ளானின் சிறப்பை  சில ஐதிஹ்யங்களில்  காணலாம். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.

  • நாச்சியார் திருமொழி 10.6 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – ஆண்டாள் இங்கு கிருஷ்ணனைப்போல நடனம் ஆடுகின்ற மயிலை வணங்குகிறாள். இதைப்போல அம்மணியாழ்வான் என்ற ஆசார்யர் தனது சிஷ்யர் ஒருவரை தண்டன் சமர்ப்பித்து வணங்குவார். இதற்கு அவர், நாம் ஸ்ரீவைஷ்ணவர்களைச் சேவிப்பது நம்முடைய சம்பிரதாயத்தில் உள்ளது, ஆகையால் சிஷ்யர் ஒருவர் தகுந்த ஸ்ரீவைஷ்ணவராக இருப்பதால் அவரைச் சேவிப்பது முறையே என்றார். இதற்கு நஞ்சீயர், சிஷ்யர்கள் போதிய ஞானம் அடையாமல் இருக்கும்போது அவர்களை  வணங்கினால் அவர்களுக்கு அஹங்காரம் மேலிட்டு  அதனால் அவர்கள் ஆன்மீக வளர்ச்சியில் குறை உண்டாகலாம் என்று வாதிட்டார். பிள்ளான் இதற்கு “ஒரு சிஷ்யர் அம்மணியாழ்வான் போன்ற  ஆசார்யரால் அனுக்ரஹிக்கப்பட்டபின் அவர்  இயல்பாகவே களங்கமற்றவராகி விடுவார், அதனால் ஆசார்யர் செயல் சரியே” என்று விளக்கினார்.
  • பெரிய திருமொழி 2.7.6 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – திருமங்கை ஆழ்வார் தன்னைப் பெண்ணாக பாவித்து (எங்களுடைய  குடும்பம் என்று சொல்லாமல்)  பரகால நாயகியின் குடும்பம் என்று சிறப்புடன் கூறுவதை இங்கு பிள்ளான் எப்படி நம்பெருமாள் நம் ஸம்ப்ரதாயத்தை எம்பெருமானாரின் தரிசனம் என்று பெயரிட்டு எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களையும் ராமானுசருடையார் (ராமானுஜ சம்பந்தம் பெற்றவர்) என்றும்,  எம்பெருமான் அவருடைய பக்தர்களை நேராக தன்னிடம் அடைவதை விட  ராமானுஜரின் சம்பந்தம்  பெற்ற பின் தன்னை அடைவதை விரும்புகிறார்.    எப்படி ஒரு அழகான சங்கிலியின் நடுவில் ஒரு கல் வைத்திருந்தால் அச்சங்கிலி எப்படி மேலும் அழகாக தோன்றுமோ அப்படித்தான் நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை என்னும்  சங்கிலித் தொடரும்  எம்பெருமானார்  நடுவில் இருப்பதால்  மேலும் அழகாக இருக்கின்றது.
  • திருவாய்மொழி 1.4.7 –  நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – நம்பிள்ளை தனது ஈடு வ்யாக்யானத்தில் நம்மாழ்வார் தாம் எம்பெருமானிடமிருந்து பிரிந்த சோகத்தில், எம்பெருமானை “அருளாத திருமாலார்” என்று அழைக்கின்றார் என்று கூறியுள்ளார். இதன் அர்த்தம் என்னவென்றால் ஸ்ரீமந் நாராயணன் இரக்கமற்றவர் என்றும்  (இதற்கு முரண்பாடாக எம்பெருமான் பிராட்டியுடன் உள்ள போது மிகவும் இரக்கமுள்ளவராக இருப்பார் என்றும்) அர்த்தம் விளக்கியுள்ளார். நஞ்சீயரும் இதற்கு “மிகவும் இரக்க குணமுள்ள பிராட்டியுடன் நீங்கள் இருந்தாலும் நீங்கள் அடியேனுக்கு அருள மறுக்கின்றீர்கள்” என்று ஆழ்வார் கூறியுள்ளதாக வ்யாக்யானம்  அருளியுள்ளார்.  இதை வேறு ஒரு கோணத்தில் “எம்பெருமான் பிராட்டியுடைய  திருமுகம் கண்டு மயக்கத்தில் உள்ளதால் எனக்கு அருளாமல் இருக்கின்றான் ” என்று  ஆழ்வார் கூறியுள்ளதாக  பிள்ளான் வ்யாக்யானம் அருளியுள்ளார்.
  • திருவாய்மொழி 6.9.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – ஆழ்வார் எம்பெருமானிடம்  ஸம்ஸாரம் என்ற துன்பக் கடலிலிருந்து தன்னை விடுவித்து திருவடித் தாமரையின் கீழ்  சேர்த்துக் கொள்ளும்படி ஏங்கினார். பிள்ளான் தன் இறுதி நாட்களில் ஆழ்வாருடைய இந்த ஏங்கலைத் தானும் எம்பெருமானிடம் பிராத்திக்க,  இதைக்கண்ட  நஞ்சீயர் மனம் வருந்தி  அழுதார். அதற்குப் பிள்ளான்  நஞ்சீயரைப் பார்த்து உயர்ந்த பரமபதத்தில் கிடைக்கும் சிறப்பான வாழ்க்கை, இந்த பூலோகத்தின் வாழ்க்கையை வித்ட  தாழ்ந்தது என்று எண்ணி நீர் வருந்துகிறீரோ என்று கேட்டு அவரை “வேதனைப்படாமல் சந்தோஷமாய் இரும்” என்றார்.

சரமோபாய நிர்ணயத்தில் பின் வரும் நிகழ்வு விவரிக்கப்பட்டுள்ளது –  உடையவர் திருவாய்மொழியின் அர்த்தத்தை  தன் அபிமான புத்ரனாகிய திருக்குருகைப்பிரான் பிள்ளானுக்கு உபதேசிக்கும்பொழுது  “பொலிக பொலிக”  என்ற பாசுரத்தை கேட்கும்பொழுது,   அதைக் கேட்ட பிள்ளான் உணர்ச்சி மேலீட்டால் பரவசத்துடன் காணப்பட்டார். இதைக் கண்ட உடையவர் எதனால் உணர்ச்சி வயப்படுகிறீர் என்று வினவினார். அதற்குப் பிள்ளான்  “ஆழ்வாரின் கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று உற்சாகமாக கூறிய பாசுரத்தில் ஆழ்வார் திரு உள்ளத்தில்  தேவரீருடைய  அவதாரத்தினால் கலி அழிந்துவிடும் என்பதை நினைத்துத்  தான் உணர்ச்சி வசப்பட்டதாக கூறினார்.  தேவரீரும் எவ்வளவு சிறப்புடையவர் என்பதை ஒவ்வொரு முறையும் தாங்கள் உபதேசிக்கும்பொழுது என்னால் கட்டுப்படுத்த முடியாமல் உணர்ச்சி வசப்படுகிறேன்.  மேலும்,  தேவரீரின் திருவாயால் திருவாய்மொழியின் அர்த்தத்தை கேட்க  நான் மிகவும் பாக்கியம் பெற்றேன்” என்றார். இதைக் கேட்ட உடையவர் மிகவும் திருப்தி அடைந்தார். அன்று இரவு பிள்ளானை அழைத்து,தனது  திருவராதனப்பெருமாளின் முன்பு நிறுத்தித் தன் திருவடியைப்  பிள்ளான் தலையில் வைத்து “எப்பொழுதும் இந்தத் திருவடித்தாமரைகளே கதி என்று  இரும், உன்னைச் சரண் அடைந்தவர்களுக்கும் இவ்வழியையே காட்டும்” என்றார்.  உடையவர் , மறுநாளே பிள்ளானை திருவாய்மொழிக்கு   ஆறாயிரப்படி வ்யாக்யானம் எழுத ஆரம்பிக்கும்படி சொன்னார் (விஷ்ணுபுராணத்தின் எழுத்து எண்ணிக்கைப்படி). இவ்வாறு உடையவர்  தன் அபிமான புதல்வரான திருகுருகைப் பிள்ளானுக்கு தனது உத்தாரகத்வத்தை வெளியிட்டார்.

ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்திரத்தில்  பிள்ளை லோகாசார்யார் நம் ஸம்ப்ரதாயத்திற்குப் பிள்ளான் சில முக்யமான கொள்கைகளை அருளியுள்ளார் என மேற்கோள் காட்டி அவரை வெகுவாகக் கொண்டாடியுள்ளார். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்:

  • சூத்திரம் 122 – பக்தியோகத்தின் குறைகள் – சுத்தமான நீர் நிறைந்த பொற்குடத்தில்  சிறிதளவு மது சேர்ந்தாலும் எப்படி அதை அருந்த முடியாதோ, அது போல ஜீவாத்மா (என்ற குடத்தில்) சுத்தமான நீரைப்போல பக்தியில் சிறிதளவு மது போன்ற அஹங்காரம் என்ற விஷம் சேர்ந்தால் அது ஸ்வரூப  விரோதத்திற்கு இட்டுச்செல்லும்.   அஹங்காரம் இல்லாத பக்தி விரும்பப்படுகிறது. ஆனால் இது சாத்தியமாகாது ஏனென்றால், பக்தி யோகம் என்பது  பக்தி செய்பவன் மனதில் பகவானை த்ருப்திப் படுத்த நாம் இதைச் செய்கிறோம் என்ற மனப்பான்மை கொள்கிறான்.  அதற்குப் பிள்ளான், ஜீவாத்மாவிற்கு, பக்தி யோகம் என்பது  இயற்கையிலேயே வரும் சுபாவாமல்ல, ப்ரபத்தி  ஒன்றே (சரணாகதி – எம்பெருமான் ஒருவரே உபாயம்) என்று ஏற்றுக்கொள்வதே ஜீவாத்மாவிற்கு உய்யும் வழி என்கிறார்.
  • சூத்திரம் 177 – பரகத ஸ்வீகாரத்தின் சிறப்பு – எம்பெருமான்    காரணமின்றி  செய்யும் உபகாரத்தினால்தான் நாம் உய்வடைகிறோம் (கைங்கர்ய ப்ராப்தி அடைகிறோம்). எம்பெருமானையொழியத் தான் தனக்கு நன்மை தேடிக்கொள்வது தவறு; எம்பெருமானே நமக்குத் தேடித்தரும் நன்மைதான் கைக்கொள்ளத் தக்கது என்ற கருத்தை உள்ளடக்கிப் பிள்ளான் அருளிச்செய்யும் வார்த்தை ஒன்றுண்டு – “தன்னால் வரும் நன்மை விலைப்பால்போலே; அவனால் வரும் நன்மை முலைப்பால்போலே“. தன் முயற்சியாலே தான் தனக்கு உண்டாக்கிக்கொள்ளும் நன்மையானது விலைகொடுத்து வாங்கின பால் போலே ஒளபாதிகமுமாய் விரஸமுமாய்  அப்ராப்தமுமாய் இருக்கும். ஸ்வாமியான  எம்பெருமான் தானே  “இவனுக்கு இது  வேணும்” என்று விரும்பி உண்டாக்கும் நன்மையானது  முலைப்பால் போலே நிருபாதிகமுகமாய் ஸரஸமுமாய் ப்ராப்தமுமாயிருக்கும் என்றபடி.

மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலையில் (பாசுரம் 40 – 41) திருவாய்மொழியின் ஐந்து வ்யாக்யானங்கள் இல்லையென்றால்  திருவாய்மொழியின் அர்த்தத்தை நாம் அறிந்து கொள்ள இயலாது என்னும் கருத்தை அருளுகிறார். மாமுனிகள் “தெள்ளாறும் ஞானத் திருக்குருகைப்பிரான் பிள்ளான்” என்று சிறப்பித்துச் சொல்லியிருப்பதிலிருந்து பிள்ளான் பகவத் விஷயத்தில் தெளிந்த ஞானம் பெற்றவராய் இருந்தார் என்பது தெரிய வருகிறது. மேலும் திருவாய்மொழியின் தெய்வீக அர்த்தங்களை “பிள்ளான்  மிகவும் ப்ரேமையுடனும்   இனிமையாகவும்  விளக்குவார்” என்று  மணவாளமாமுனிகள் புகழ்கிறார். இதன் பின்னர் பட்டரின் ஆணைப்படி  நஞ்சீயர் 9000 படியும், நம்பிள்ளையின் 36000 படி  காலக்ஷேபத்தை வடக்குத்திருவீதிப்பிள்ளை பதிவு செய்துள்ளபடியையும், நம்பிள்ளையின் ஆணைப்படி பெரியவாச்சான் பிள்ளை அருளிய 24000 படியும் மற்றும் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச்செய்த 12000 படியிலும் திருவாய்மொழியின் பாசுரங்களின் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தத்தை விளக்கியுள்ளனர்.

இதுவரை  திருக்குருகைப்பிரான் பிள்ளானின் சிறப்பான வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம். அவர் தன்னை முழுவதும் பாகவத  நிஷ்டையில் ஈடுபடுத்திக்   கொண்டதால் எம்பெருமானாருக்கு மிகவும் பிரியாமானவரானார். நாமும் நமக்கு அத்தகைய பாகவத நிஷ்டை சிறிதாவது கிடைப்பதற்கு அவரது திருவடித் தாமரைகளில் ப்ரார்த்தனை செய்வோம்.

திருக்குருகைப்பிரான் பிள்ளானின் தனியன் (பகவத் விஷய காலக்ஷேபத்தில் பாராயணம் செய்வது)

த்ராவிடாகம ஸாரக்யம்  ராமானுஜ  பதாச்ரிதம் |
ஸுதீயம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்:  http://acharyas.koyil.org/index.php/2013/04/14/thirukkurugaippiran-pillan-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org